The Thavamani Times, Published on 29 June 2026,
தவெக அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சைகள் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென குரல்கள் வலுத்து வருகின்றன. அதோடு இது சம்பந்தமாக எதிர்க்கட்சியினர் போராட்டங்களை முன்னெடுத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திமுக மாணவர் அணி அமைச்சர் சரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தானில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்றார். அதே தினம் தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியது. இதனையடுத்து அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட பழைய வீடியோ என தெரிவித்து அமைச்சர் சரத்குமார் தரப்பில் இருந்து விளக்கம் ஒன்று அளிக்கப்படது.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்ட வீடியோ விளக்கமும் சர்ச்சைகளையும், கேள்விகளையும் எழுப்பியது. இப்படியான நிலையில் இன்று திமுக மாணவர் அணியை சார்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று தவெக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.
அதே போல் திமுக முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய் போதை ஆசாமியை கைது செய். மறைக்காதே மறைக்காதே. குற்றத்தை மறைக்காதே. நடிக்காதே நடிக்காதே மாத்திரை என்று நடிக்காதே என கோஷங்களை எழுப்பினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் செல்போனுக்கு பின்னால் ஒரு பவுடரை நசுக்குவதை போன்று ஒரு காட்சி அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் தன்னிடம் இருக்கும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வைச்சு நசுக்கிறார். கையில் ஐநூறு ரூபாய் நோட்டும் வைத்திருந்தார். பொதுவாக உயர் ரக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் இதுபோன்று செய்வார்கள் என கூறப்படுகிறது. இதனை தான் அந்த அமைச்சர் செய்து இருக்கிறார். இதற்கு அவர் என்னுடைய பிறந்த சில நாட்களே ஆன குழந்தைக்கு மருந்து அளிப்பதற்கே இது மாதிரி செய்தேன் என்கிறார். எந்தவொரு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கும் மருத்துவர் மாத்திரை கொடுப்பதில்லை
அமைச்சர் சொன்ன பொய்யை அவர் மனைவியும் மறுத்து இருக்கிறார். எனவே பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது அவரின் சமூக வலைத்தள பதிவில் இருந்தே தெரிய வந்துள்ளது. இதனை மறைப்பதற்கு ஏராளமான பொய்களை சொல்லி கொண்டிருக்கிறார். போதைக்கு எதிரான பிரச்சாரம் கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சி காலத்தில் மிகப்பெரிய அளவில் நடந்தது. பிற மாநிலங்களில் இருந்து கஞ்சா கொண்டு வருவதை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நாங்களும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பிரச்சாரம் நடத்துகிறோம் என்று மாரத்தான் போட்டி வைத்தது. அதனை தொடர்ந்து அமைச்சரின் இந்த வீடியோ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டியது முதலமைச்சரின் ஜனநாயக கடமை. ஆனால் இதுவரை பதில் சொல்லவில்லை. அதோடு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மா. சுப்ரமணியன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது