
The Thavamani Times, Pubkshed in 29 June 2026,
திருவண்ணாமலை ஜூன் 29,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் புதூர் மாரியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், ஜவ்வாது மலையில் பெய்யும் மழைநீர் மேல்செங்கம் புதூர் ஏரிக்கு வந்து சேரும் பிரதான நீர்வழிப்பாதை நீண்ட காலமாக ஆக்கிரமிப்பாளர்களால் அடைக்கப்பட்டு இருந்ததால், மழைநீர் ஏரிக்கு செல்வதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, உழவர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் அருள் ஆறுமுகம் தலைமையில் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்கள், மனு அளித்தல், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஜனநாயக வழியிலான போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.
இப்போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நீர்வழிப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதன் மூலம் ஜவ்வாது மலையில் இருந்து வரும் மழைநீர் தடையின்றி மேல்செங்கம் புதூர் ஏரிக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், உழவர் உரிமை இயக்கம் சார்பில் நேற்று சாதனை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநிலத் தலைவர் அருள் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் இயக்க நிர்வாகிகள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நிர்வாகிகள், நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும் என்றும், இயற்கை வளங்களை காக்க மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், விவசாயிகளின் உரிமைகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக உழவர் உரிமை இயக்கம் தொடர்ந்து பாடுபடும் என்றும் உறுதியளித்தனர்.
நீர்வழிப்பாதை மீட்கப்பட்டதன் மூலம் மேல்செங்கம் புதூர் ஏரியின் நீர்வரத்து அதிகரித்து, சுற்றுவட்டார விவசாய நிலங்கள் பயன்பெறும் என அப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.








