
The Thavamani Times,
Published on 07 July 2026,
சென்னை | ஜூலை 7
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகிற ஜூலை 21-ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தேசிய தலைமையகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கட்சியின் அமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) பகுதியில் ஜூலை 21-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி முகாமில் ஒரு நாளாவது ராகுல் காந்தி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார் எனக் கூறப்படுகிறது.
மேலும், த.வெ.க. தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்துவதற்காக முதலமைச்சர் விஜய்யிடம் நேரம் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தலைவர்களின் நேரம் உறுதியான பிறகே நிகழ்ச்சியின் இறுதி ஏற்பாடுகள் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.









