உண்மை • நம்பிக்கை • தாக்கம்

மழைக்கால தொற்றுநோய்களைத் தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்:

The Thavamani Times 

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலரின் உத்தரவின்படி, மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில், செங்கம் வட்டாரத்திற்குட்பட்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேல்பள்ளிப்பட்டியில் இன்று (09.07.2026) அனைத்து துறைகளும் பங்கேற்ற ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மரிய தேவ ஆனந்த் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிலம்பரசன் முன்னிலை வகித்தார். மாவட்ட கொள்ளைநோய் நிபுணர் டாக்டர் நிஷாந்த், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மற்றும் வருவாய், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, கல்வி, காவல், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுவாக அதிகரிக்கும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு, லெப்டோஸ்பைரோசிஸ் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக, குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்தல், மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை முறையாக சுத்தம் செய்தல், குளோரினேஷன் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல், மழைநீர் தேங்கும் இடங்களை உடனடியாக அகற்றுதல், கொசு உற்பத்தி மையங்களை கண்டறிந்து ஒழித்தல், புகைமருந்து தெளித்தல் மற்றும் லார்வா ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் ஆகியவை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையான ரத்தப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தி, வீடு தோறும் களப்பணியாளர்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

நாய் கடி சம்பவங்கள் அதிகரிக்காத வகையில் தெருநாய்கள் தொடர்பான கண்காணிப்பு, கடிபட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்குதல், பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தி, சுற்றுப்புறச் சுகாதாரத்தை பேணுவதன் அவசியம் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடித்தல், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருத்தல், காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுதல் போன்ற விழிப்புணர்வு தகவல்களை விரிவாக எடுத்துரைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் பரவுவதை முழுமையாகக் கட்டுப்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிக்கவும் :

புதிய செய்திகள் படிக்கவும் :