உண்மை • நம்பிக்கை • தாக்கம்

பயிர் கடன் தள்ளுபடி – கூட்டுறவு கடன் சங்கத்தில் மனு அளித்த உழவர் உரிமை இயக்கம்

THE THAVAMANI TIMES,

திருவண்ணாமலை மாவட்டம்

பயிர் கடன் தள்ளுபடி கோரி மேல்புழுதியூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் மனு அளித்த உழவர் உரிமை இயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள மேல்புழுதியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பயிர் கடன் தள்ளுபடி கோரி உழவர் உரிமை இயக்கம் சார்பில் புதன்கிழமை (15.07.2026) மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

உழவர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் குண்டாஸ் விவசாயி அருள் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

போராட்டத்தின் போது, தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன்களை அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே பயிர் கடன் பெற்றுள்ள விவசாயிகளை கடனை உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு நிர்பந்திக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர், மேல்புழுதியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் செல்வராஜ் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட செயலாளர், விவசாயிகளின் கோரிக்கையை மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

மேலும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, கூட்டுறவு வங்கிகளில் ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை முழுமையாகவும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்யவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் உரிமை இயக்கத்தினர் வலியுறுத்தினர்.

போராட்டம் முழுவதும் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், மனு அளிக்கும் நிகழ்வு அமைதியான முறையில் நிறைவடைந்தது.

இதையும் படிக்கவும் :

புதிய செய்திகள் படிக்கவும் :