
THE THAVAMANI TIMES
திருவண்ணாமலை மாவட்டம்
இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் TNPSC அறிமுக மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகளின் அரசு வேலைவாய்ப்பு கனவை நனவாக்கும் நோக்கில் TNPSC அறிமுக மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று (15.07.2026) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் அருட்சகோதரி சம்பூர்ண மேரி தலைமையில், சிறப்பு அழைப்பாளர்களாக திரு. ஜீவரத்தினம் (TNPSC-SME, சென்னை), திரு. வசந்தகுமார் (TNPSC-SAM, சென்னை), திரு. சையத் பிலால் (Franchise Head, Veranda Race, திருவண்ணாமலை), செல்வி. சந்தோஷினி (Branch Manager, திருவண்ணாமலை) ஆகியோர் கலந்து கொண்டனர். குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த அவர்கள், மாணவிகள் அரசு பணிகளில் அதிக அளவில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழிகாட்டல் அமர்வில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், காவல்துறை, வங்கித் துறை, ரயில்வே, இன்சூரன்ஸ் மற்றும் மத்திய அரசுத் துறை வேலைவாய்ப்புகள் தொடர்பான போட்டித் தேர்வுகள், அவற்றுக்கான தகுதிகள், தேர்வு முறை, பாடத்திட்டம் மற்றும் தயாரிப்பு வழிமுறைகள் குறித்து மாணவிகளுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்களான திரு. ஜீவரத்தினம் மற்றும் திரு. வசந்தகுமார் ஆகியோர், அரசு வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்டு திட்டமிட்டு தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை எடுத்துரைத்தனர். தினசரி செய்தித்தாள் வாசிப்பு, பொது அறிவு வளர்த்தல், முந்தைய ஆண்டுத் தேர்வு வினாத்தாள்களைப் பயிற்சி செய்தல், நேர மேலாண்மை மற்றும் தன்னம்பிக்கையுடன் தயாராகுதல் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும், Veranda Race நிறுவனத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களும் மாணவிகளிடம் பகிரப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவில் கல்லூரியின் செயலர் அருட்சகோதரி சம்பூர்ண மேரி, மாணவிகள் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து விடாமுயற்சியுடன் உழைத்து அரசு பணிகளில் சாதனை படைக்க வேண்டும் என்று வாழ்த்தி சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவிகளின் சந்தேகங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் விளக்கமளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். TNPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சி மாணவிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.








